Friday, December 19, 2008

மறைபொருள் - குறும்படம்

'மீன்காரத் தெரு' நாவலுக்கு ஈரோடு மாவட்ட தமுஎச மாநாட்டில் 18.08.2007 அன்று சிறந்த நாவலுக்கான 'பெருமாயி குப்பண்ணன்' விருது கொடுத்தார்கள். நிகழ்ச்சிக்கு அதிகாலையே நானும் ராஜியும் குழந்தைகளும் தஞ்சை நண்பர்கள் செல்வா, சசிகுமார், செந்தில் ஆகியோரும் புறப்பட்டுச் சென்றோம். அந்தப் பயணம் இனிமையான அனுபவமாக இருந்தது. பேருந்து குளித்தலை அருகே சென்றபோது வாழைப்பழம், வெள்ளரிக்காய்கள் வாங்கி சுவைத்துக்கொண்டே இலக்கியம் தவிர்த்த வளவளவென்ற உரையாடல்கள் - நகைச்சுவைத் துணுக்குகள் வழியெங்கும் சிதறிக் கொண்டிருந்தன. நீண்ட பயணம்தான். நண்பர்கள் உடனிருந்ததால் அயர்ச்சியைத் தணித்துக்கொள்ள முடிந்தது.

நிகழ்ச்சியை ஈரோடு மாவட்டத் தோழர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். என்னுடன் இரா.நடராசன், அ. மார்க்ஸ், புதிய ஜீவா ஆகியோருக்கும் விருது வழங்கப்பட்டது. மார்க்ஸ் விழாவுக்கு வரவில்லை. அவருக்கு பதிலாக ஓடைதுரையரசன் விருது பெற்றுக்கொண்டார். அப்போது ஈரோடு மாவட்ட ஆட்சித் உதயசந்திரன் கலந்துகொண்டு சிறப்பித்தார். பொதுச் செயலாளர் ச. தமிழ்செல்வன், கவிஞர் ஆதவன் தீட்சண்யா கலந்துகொண்டனர்.

கீரனூரிலிருந்து கூடலிங்கமும் முருகேசும் வந்திருந்தனர். மகிழ்ச்சியாக இருந்தது. விழா தொடங்கும்முன் பல குறும்படங்கள் திரையிட்டனர். அவற்றுள் பொன். சுதா இயக்கிய 'மறைபொருள்' என்னை பாதித்தது. வசனம் எதுவுமில்லாத அந்த ஐந்து நிமிடக் குறும்படம் பெண்கள் மீதான அடக்குமுறைக்கு எதிரான ஒரு குரலை மௌனமாகப் பதிவு செய்ததால் பார்வையாளர்களைக் கவர்ந்தது. பல நிமிடங்கள் கைத்தட்டலைப் பெற்றது. குறும்படம் காட்சி ஊடகத்தின் குறைவான கால அளவைக் கோருகிறது. ஆனால் பெரிய தாக்கத்தைப் பார்வையாளர்களிடம் ஏற்படுத்துகிறது. 'மறைபொருள்' ஒரு செய்தியை எப்படிக் கலை வடிவமாக்குவது என்பதற்கு சிறந்த உதாரணமாக இருக்கிறது. பொன்.சுதாவுக்கு என் வாழ்த்துகள்.

1 comment:

  1. We have just added your blog link to Tamil Blogs Directory - www.valaipookkal.com.
    Please check your blog post linkhere

    If you haven't registered on the Directory yet, please do so to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.

    Thanks

    Valaipookkal Team

    ReplyDelete